Tuesday 20 August 2013

அன்பிலான சொல். . .




உனக்கான
சொல்லைத் தேர்ந்தெடுத்து விட்டேன்

தீர்ந்து போகவே முடியாதது அச்சொல்

பகலும்
இரவும்
இரவின் இடைவெளிகளிலும்
நிரம்பித் ததும்பும்
உன் நினைவுகளினால்
உயிர் பெறுகிறது
அந்தச் சொல்

பேசிப்பேசி
பேச மொழியற்ற தருணங்களில்
என் உலகிலிருந்து
ஒரு பூவைப் பறிப்பது போல
அந்த சொல்லை
எடுத்து வைத்துள்ளேன்
உன்முன்

பூவின் வாசமென
உருமாறி நிரம்புகிறது நம்மிடையே

அச் சொல்லை
நீ கேட்பாயெனில்
ஆதியிலே
அச்சொல்லிருந்தது

அந்தசொல்
நானாக
உயிர்பெற்றிருக்கிறேன் என
உணர்வாய்

அன்று
அது
நம்மை அழைத்துச் செல்லும்
அன்பினால்
பூக்கள் பூக்கும் தேசத்திற்கு .

No comments: