Thursday 9 April 2020






கவிஞர் சக்தி ஜோதியின் காணொளி பக்கத்திற்கு...


https://www.youtube.com/channel/UCaNIzDwImYj3gzr6ys2CV_g?view_as=subscriber

Sunday 18 August 2019

எமக்குத் தொழில் கவிதை - கவிஞர் சக்தி ஜோதி.


"பெண் எப்பொழுதும் மனம் சார்ந்தே இயங்குகிறாள் "-    


"மொழிதான் நம்முடைய மதமாக இருக்கிறது.  மொழிதான் நம்முடைய தத்துவமாக இருக்கிறது." 

                                                                                            - சக்தி ஜோதி.                       
நன்றி : கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி. 

VID 20190810 WA0005

Wednesday 7 June 2017

விகடன்.காம் இல் 

'கல்வி என்பது குழந்தைகளை இம்சிக்கக் கூடாது!' - சக்திஜோதி



உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்..

அலுவலக வேலை சார்ந்த சந்திப்புகள், இலக்கிய நிகழ்வுகள், நூல் வெளியீடுகள், கல்லூரி விழாக்கள் என நிறைய அரங்குகளில் பேச நேர்ந்திருக்கிறது. அவை எல்லாவற்றையும் விட ஒரு சிறிய பள்ளி ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு, அங்குள்ள குழந்தைகளோடு உரையாடுகையில் எனக்குக் கிடைக்கும் நிறைவு அளவில்லாதது. சாதாரண பள்ளி வேலை நாட்களை விடவும், ஆண்டுவிழா சமயத்தில் அக்குழந்தைகள் அடையும் உற்சாகமும் உத்வேகமும் தனி. ஒருவருடம் முழுவதற்குமான மகிழ்ச்சியை அந்த ஒருநாளிலேயே அவர்கள் அடைந்துவிடுகிறார்கள். அந்தத் தருணத்தில் அவர்களோடு இருப்பதன் மூலமாக பால்ய நினைவுக்குள் அமிழ்ந்திருக்கவும் குழந்தைமையை மீட்டுக்கொள்ளவும் முடிகிறது.
ஒருகாலத்தில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் என்பது பள்ளிக்குழந்தைகளுக்கு ஒருகாலத்தில் கொண்டாட்டமாக இருந்த மாதங்கள். பொதுவாக கல்வியாண்டின் தொடக்கத்தில் விளையாட்டு தினமும், ஆண்டின் இறுதியில் ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதுண்டு.  விளையாட்டில் தேர்ந்த மாணவர்கள் பயிற்சிக்காக பள்ளிகூட மைதானத்திலேயே கிடப்பது ஆண்டின் துவக்கத்திலும், கலையில் தேர்ந்தவர்கள் நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக பாடநேரத்தைத் தவிர்ப்பது ஆண்டின் இறுதியிலும் தவறாமல் நிகழும். பாடப்புத்தகங்களில் நாட்டம் இல்லாத பலர் நாடகத்தில் ஒரு வசனம் கூட பேச வாய்ப்பில்லாத மிகச்சிறிய கதாபத்திரங்களுக்குப் பெயர்கொடுப்பார்கள். அரிதாரத்தைப் பூசிக்கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர்கள் வசிக்கும் தெரு முழுக்கக் காட்டி மகிழ்வார்கள்.   
பள்ளிக்கூட நாடகங்களில் தலைகாட்டிய ஆர்வத்தில் திரைப்படங்களில் நடிப்பதற்காக  வீட்டைவிட்டு நகரத்திற்கு ஓடிப்போனவர்களின் கதைகள் இல்லாத கிராமமே இருக்கமுடியாது. அந்தளவுக்கு நடிப்பின் மீதும், நடனத்தின் மீதும் இயல்பான பற்றுடன் இருப்பவர்கள் ஒருபக்கம் இருந்தார்கள். தேனி மாவட்டம் இராயப்பன்பட்டியில் ஈஸ்டர் தினங்களையொட்டி நிகழ்த்தப்படுகிற பாஸ்கா திருவிழாவைப் பார்ப்பதற்காகவே தவக்காலங்களை விரும்புகிறவர்களை அறிந்திருக்கிறேன். தொலைக்காட்சிப் பெட்டிகள் அறிமுகம் ஆகாத காலத்தின் உன்னதம் என்பதே இம்மாதிரியான நாடக நிகழ்வுகள் என்று சொல்லலாம். என்னுடைய பள்ளிப் பருவத்தில் பார்க்க விரும்பிய அந்த பாஸ்கா நாடகத்தில் இயேசுவாக நடித்த ஒருவரை பின்னாளில் திரைப்படங்களில் வெற்றி பெற்றவராகச் சந்தித்திருக்கிறேன். கிராமத்து நாடங்களில் ‘ஜோ’ வாக இருந்த அவர்  ‘ஜோ மல்லூரி’ எனத் திரையில் அறியப்படுவதற்குள்  கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கடந்துவிட்டது. யார், எதனிடம் தங்கள் கனவையும் காலத்தையும்  ஒப்புகொடுக்கிறார்களோ அவர்கள் அதில் வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
இன்றைய கிராமங்களில் ஆங்கிலப்பள்ளிகளுக்குக் குறைவில்லை. அவர்கள் நடத்துகிற ஆண்டுவிழாக்கள் மாலை ஐந்து மணிக்குத் தொடங்கி நள்ளிரவுவரை நீள்கிறது. குழந்தைகளும் பெற்றோர்களும் உறவினர்களும் கூடி ஒரு பள்ளிக்கூட ஆண்டுவிழாவாக அல்லாமல் ஊர்த்திருவிழாவினைப் போலவே நிகழ்த்துகிறார்கள். பள்ளியில் படிக்கும் அத்தனைக் குழந்தைகளையும் மேடையேற்றுகிற பள்ளி நிர்வாகங்கள் சொல்வது என்னவென்றால், குழந்தைக்கு ஆடவருகிறதோ, நடிக்க வருகிறதோ இல்லையோ அனைத்துப் பெற்றோர்களுமே தங்கள் பிள்ளைகளை மேடையில் பார்க்க விரும்புகிறார்கள். ஆடல் பாடல் வகைமையினை அறிந்துகொள்ளவியலாத பாலர் பள்ளி குழந்தைகள் உட்பட எட்டாம் வகுப்புவரை அனைவரையுமே ஏதோவொரு நிகழ்வில் மேடையேற்றி விடுகிறார்கள். ஒருசில குழந்தைகள் அற்புதமாக ஆடுவார்கள். அவர்கள் நான்கைந்து நிகழ்வுகளில் கலந்துகொண்டு மொத்தக் கலைநிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஆக்கிவிடுவார்கள்.
சமீபத்தில் நான் கலந்துகொண்ட பள்ளிவிழாவில் பரதம், கரகம், குறவன் குறத்தி நடனம், நாட்டுபுறப்பாடல், நாடகம், துள்ளலிசை நடனம் என வெவ்வேறு நிகழ்வுகளில் தொடர்ந்து ஆடிகொண்டிருந்த ஒரு பெண்குழந்தையைப் பார்த்தேன். நிகழ்வு முடிந்த பிறகு அந்தக் குழந்தையிடமும் அவள் அம்மாவிடமும் பேசினேன். அப்போது அவள் அம்மா, “எம்பொண்ணு இவ, பேரு காவியா, இந்த வருஷம் ஏழாம் வகுப்புப் படிக்கிறா. அடுத்த வருஷம் பெரியவளாகிடுவா, அப்புறமா இவ இப்படியெல்லாம் மேடையேறி ஆடிட்டு இருக்க முடியாது, ஆனா இவளுக்கு டான்ஸ் ஆடுறது ரொம்பப் பிடிச்சிருக்கு, அடுத்த வருஷம் ஆட முடியாது என்பதால இந்த வருஷம் அவ மிஸ்கிட்ட கேட்டு ஏழு ப்ரோக்ராம் வரைக்கும் அவளே சேர்ந்துகிட்டா, நானும் சரி.. பொட்டபுள்ள ஆசைபடுது, இந்த வயசுக்குள்ள தானே அனுமதிக்க முடியும்ன்னு விட்டுட்டேன்.“ என்று சொன்னார். இம்மாதிரியான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏழாம் எட்டாம் வகுப்புவரை கட்டாயப்படுத்தி மேடையேற்றும் பெற்றோர்கள் கூட பெண்பிள்ளைகளை பருவம் வந்தவுடன் “இனியென்ன ஆட்டமும் பாட்டும்” எனத் தட்டிவைப்பது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
பெண்குழந்தைகள் பருவம் எய்தியவுடன் விளையாட்டுகளும் கலையார்வமும் ஒடுக்கப்படுகிற நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது. குறிப்பிட்ட பருவத்திற்குப்பிறகு பெண்குழந்தைகளின் புத்தகப்பைக்குள் அவர்களது கனவுகளும் இரகசியமாக மறைத்து வைக்கப்படுகிறது. முன்பொரு காலத்தில் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய பாடலையும் நடனத்தையும் அரங்கேற்றிப்பார்க்க தங்கள் மகள்களிடம் முயலுகிற அம்மாக்கள் கூட மகள்கள் பருவம் வந்தவுடன் அவர்களின் கனவுகளை கலைத்துவிடுகிறார்கள்.
இதனை விடவும் மேலான இன்னொரு சிக்கல் இந்தக்கால மாணவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அது, குழந்தைகள் ஒன்பது படிக்கத் தொடங்கியதும் பத்தாம் வகுப்புக்கான நடுக்கம் பெற்றோருக்கு வந்துவிடுகிறது. பாடப்புத்தகங்களைப் படிக்கவும் மதிப்பெண்களை எடுப்பதற்காகவும் மட்டுமே பிறந்தவர்கள் போல அதன்பின்பு அவர்களுடைய வாழ்வு பெரும்பாலும் மாறிவிடுகிறது. கல்வி என்பதை நான்கு சுவர்களுக்குள் பாடப்புத்தகங்களில் கற்றுக்கொள்வதாக நினைக்கிற தலைமுறையினை உருவாக்கிவிட்டோம். ஒவ்வொருமுறை பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் பொழுதும் மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கிவிட்டார்கள். எங்காவது ஒரு மாணவனோ அல்லது மாணவியோ தேர்வில் தோற்றதால் தற்கொலை செய்துகொண்ட செய்தியைக் கேட்காமல் ஒரு வருடத்தையேனும் கடக்க முடியாதோ எனத்தோன்றிவிட்டது.
அடிப்படையில் நமது பண்டையக் கல்வி முறையானது வாழ்வோடு இயைந்த கலைகளாகவும் தொழில் திறன் சார்ந்த பயனுறு படிப்பாகவும் இருந்தது. எகிப்து, சுமேரியா, பாபிலோனியா, சீனா, ஜப்பான், பெர்சியா, கிரேக்கம் போன்ற நாடுகளைப் போலவே நமது இந்தியக் கலைமரபும் தொன்மையான ஒன்று. அதில் பழந்தமிழ் கலைகளுக்கும் தனியிடம் உண்டு. பாணர், துடியர், விறலியர், கூத்தர், பறையர், கடம்பர், வினைஞர் என பலவகையான கலைமரபினர் வாழ்ந்தனர். யாழ், குழல், பறை, முரசு, பம்பை, தூம்பு, சங்கு, கோடு, போன்ற தோல்கருவி, துளைக்கருவி, குழற்கருவி போன்றவை இருந்த பாடல் பதிவுகள் மூலமாக இசைக்கலையின் வளமையை அறிய முடிகிறது.  ஆட்டனத்தி, ஆதிமந்தி, ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் போன்றோர் பற்றிய குறிப்புகளில் ஆடற்கலையின் நுட்பம் அறிந்த கலைஞர்களைப்பற்றி அறிய முடிகிறது. கட்டடக்கலை, ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை சார்ந்தும் சாட்சியங்களாக சங்கப்பாடல்களை அடையாளம் காணமுடிகிறது.
பொன்முடியாரின் சங்கப்பாடலில் “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்கிற வரியானது வெறுமனே ஏட்டுக்கல்வியினை மட்டும் குறிப்பிடவில்லை. ஒற்றைச் சாளர நிகழ்வில் ஒருவனைச் சான்றோன் ஆக்குவது சாத்தியமில்லை. மதுரைக்காஞ்சியில்,
“தொல்லாணை நல்லாசிரியர்
புணர்க்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்” (மது:761) என்கிற வரிகளில் கல்வியில் தேர்ந்து மெய்யுணர்ந்த ஆசிரியர்கள்பற்றிக் குறிப்பிடுகிறது. மேலும் ஏட்டுக்கல்வி என்பதேகூட பல்வேறுவிதமான  நூல்களைக் கற்று அதனுடைய உண்மையை கண்டுணரும் பொருட்டு, வாதம் செய்கிற முறையையும் பழந்தமிழர் கல்வி கொண்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாகத்தான்  
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”

என்கிற இறையனார் என்னும் சங்கப்புலவர் எழுதிய குறுந்தொகைப் பாடலின் அடிப்படையில் திருவிளையாடல் புராணம் என்கிற கதைவடிவமும் அதனைத் தொடர்ந்து திரைப்படமும் உருவாக்கப்பட்டது. கல்வியை கதை வடிவமாக மாற்றுவதன் வழியாக கற்பித்தல் நிகழ்கிற நிலமாகவே இருந்திருக்கிறது.

வேட்டைத்தொழிலையும் வேளாண்தொழிலையும் அடிப்படையாகக் கொண்ட ஆதிக்குடிகளிடம் பாறைகளில் வண்ணம் தீட்டுவதும் கற்களைச் செதுக்குவதும் இயல்பான பொழுதுபோக்கு நிகழ்வாகத் தொடங்கியிருக்கும்.  பொருள்தேடி வெளியே சென்றவர்கள் திரும்பிவந்து அவர்கள் சந்தித்த இடர்பாடுகளையும் அதிலிருந்து தப்பித்த வகைகளையும் நடித்துக்காட்டியதன் மூலம் நாடகம் அரங்கேறியிருக்கும். வாழ்வியல் சார்ந்த செயல்பாடுகள் அழகுணர்ச்சி வெளிப்பாடாக வளர்ச்சியடைந்திருக்கும். இதனடிப்படையிலேயே பயிற்றுவித்தலும் நடைபெற்றிருக்கும் என்பதால் பழந்தமிழகக் கல்வி முறையானது  வாழ்வியல் சார்ந்ததாக மட்டுமே இருந்திருக்கும். அங்கிருந்து வெகுதூரம் பயணித்திருக்கும் இன்றைய கல்வி முறையில் படித்த கல்விக்கும், செய்யும் பணிக்கும் சம்மந்தமே இல்லாத சூழலில் வாழ்கிறவர்களை அன்றாடம் சந்திக்க முடிகிறது.
இன்றைய கல்விமுறையினைக் குற்றம் சொல்லிக்கொண்டே அதனை வளர்த்தெடுக்கும் செயலும் நடந்து கொண்டிருக்கிறது. பிறக்காத குழந்தைக்கு நுழைவுத்தேர்வெழுதும் பெற்றோர்களைப்போலவே ஆறாம்வகுப்புப் படிக்கும் குழந்தையை ஐஐடி பரீட்சைக்குத் தயார் செய்வதும் முன்னிலும் தீவிரமடைந்திருக்கிறது. ஒருக்காலத்தில் குழந்தைகளுக்கு தற்கொலை என்றால் என்னவென்றே தெரியாது. குறிப்பாக தேர்வுக்கால பயமும், தேர்வு முடிவுகளை அறிந்துகொள்கிற நாளின் பதற்றமும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மேலும் இயல்பாக இருந்த கலைசார்ந்த நாட்டமும் தொழில்முறையாக மாற்றப்பட்டுவிட்டது. வாழ்நாள் முழுவதும் பயிலவேண்டிய ஒரு கலையினை எட்டாம் வகுப்பிற்குள் கற்றுத் தேர்ந்துவிட முடியுமென நினைப்பவர்களால் குழந்தைகளின் விருப்பங்கள் அழிக்கப்படுகிறது. தவிர அந்தப்பருவத்திற்குள் ஒரு குழந்தை அனைத்துக் கலைகளிலும் மேதமையுடன் திகழமுடியுமென்பதாக நம்பவைக்கப்பட்டுள்ளது. எனவே பால்யத்தின் விளையாட்டுகளைத் துறந்தவர்களாக இன்றைய குழந்தைகள் ஆகியிருக்கிறார்கள்.
எப்படி வாழவேண்டும், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைக் கற்றுத்தரக்கூடிய  இராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இதிகாசக்கதைகளைப் போதிக்கிற  தாத்தா,பாட்டியின் அண்மையின்றி குழந்தைகள் தனித்திருக்கிறார்கள்.  முந்தைய தலைமுறையிடமிருந்து செவிவழி அறிந்துகொள்ள இயலாத கதைகளற்ற குழந்தைகளின் வெளியானது வளரிளம்பருவ கற்பனைகளை விரிவுசெய்ய இயலாத நிலைக்கு நகர்ந்திருக்கிறது. மூத்தோரிடமிருந்து அறியப்படுகிற கதைகள் உறவுகளைப் பலப்படுத்தும்

குடும்ப உறவுகளின் இயல்பான அரவணைப்பு இன்றி தொலைகாட்சி, கணிப்பொறி, அலைபேசி என ஒரு மெய்நிகர் உலகில் வாழ  நிர்பந்திக்கப்பட்ட ஒரு தலைமுறையினை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம்.

எல்லோர் வீடுகளிலும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை இருக்கிறார்கள். தாயும் தகப்பனும் சம்பாதிக்கிறார்கள். குழந்தை என்ன கேட்டாலும் தட்டாமல் வாங்கிக்கொடுக்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். விளையாட்டுக்காக பள்ளிக்கூடங்களில் ஒதுக்கப்படுகிற பொழுதானது,  கணக்குப்பாடம் படிக்கவோ அறிவியல் படிக்கவோ மாற்றப்பட்டு விளையாட்டுகள் அற்ற மைதானங்களையே அநேகமான பள்ளிகூடங்களில் காணமுடிகிறது. விளையாட்டுப் போட்டிகள் வெற்றி தோல்வியை தாங்குகிற பக்குவத்தை உருவாக்குகின்றன என்பதை மட்டுமல்ல விளையாட்டு ஒருவிதமான குழு ஒற்றுமையை உருவாகும் என்பதையும் இன்றைய கல்விமுறை மறந்துவிட்டது.

ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் என்கிற அரசன் எழுதிய புறநானூறு பாடலொன்று
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!”(புறம்:183)
தமக்கு கல்வி கற்றுத்தருகிற ஆசிரியருக்கு உரியவகையில் உதவி செய்தும், அவருடையத் தேவையான பொருளுதவி செய்தும், அவரை வழிபடும் மனதுடன் செயல்பட்டும் கல்வி கற்க வேண்டும் எனக் கூறுகிறது. இத்தனையும் செய்து கற்பித்தலுக்குத் தகுதியுடைய ஆசிரியரைத் தேர்ந்த நிலையிருந்து கல்வி என்பது நிறுவனமயமான சூழலில் ஆசிரியரின்  அடையாளம் மறைக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒருகாலம் வரையில் ஆசிரியருக்கு பணிந்திருந்த மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும்  இன்றைக்கு  நிறுவனங்களிடம் முற்றிலுமாக பணிந்து கிடக்கவேண்டிய நிலை உள்ளது.   

கல்வியும் கலையும் தங்களை மட்டுமல்ல தாங்கள் வாழும் சமூகத்தையும் மேம்படுத்த வல்லது என நம்பி செயல்பட்டவர்கள் பலருண்டு. அவர்களால்தான் இந்த பூமி முழுவதும் அவற்றின் விதைகள் முளைத்து விருட்சங்களெனப் பரவி நிற்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் அதற்கேயுரிய தனித்திறன்கள் இருக்கும். அவற்றைக் கண்டறிந்து வளர்த்தெடுக்கக் கூடிய  பக்குவமும் நிதானமும் கொண்ட கல்விமுறை நமக்கு வேண்டும்.
கலீல் ஜிப்ரானின் வரிகள்,  
"உங்கள் குழந்தைகள்
உங்களுடையவர் அல்லர்.
அவர்களே வாழ்வும்,
வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயின்றி
உங்களிடமிருந்து அல்ல.
உங்களுடன் இருந்தாலும்
அவர்கள்
உங்களுக்கு உரியவர்களல்லர். 
அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்.
எண்ணங்களால் அல்ல.
அவர்களுகென்று சுய சிந்தனைகள் உண்டு.
அவர்களுடைய உடல்களை
நீங்கள் சிறைப்படுத்தலாம்;
ஆன்மாக்களை அல்ல.
கனவிலும் நீங்கள் நுழையமுடியாத
எதிர்காலக்கூட்டில்
அவர்களது ஆன்மாக்கள் வசிக்கின்றன.
நீங்கள் அவர்களாக முயலலாம்;
அவர்களை உங்களைப்போல
உருவாக்கக் முயலாதீர்கள்.
வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதோ,
நேற்றுடன் தங்கிப்போவதோ இல்லை.
உயிர்கொண்ட அம்புகளாய்
உங்கள் குழந்தைகளும்
விரைந்து செலுத்தும் வில்லாய்
நீங்களும் இருக்கிறீர்கள்.
வில்லாளியானவர்,
முடிவில்லா பாதையின் இலக்கை நோக்கி
தன்னுடைய அம்புகளை
துரிதமாகவும் தூரமாகவும்
செலுத்தும்வண்ணம் உங்களை வளைக்கிறார்.
அவர் கைகளில் உங்களின் வளைவு
மகிழ்வுக்கு உரியதாக இருக்கட்டும்.
ஏனெனில்
பறக்கும் அம்புகளை மட்டுமல்ல 
நிலைத்து நிற்கும் வில்லையும்
அவர் நேசிக்கிறார்.“ 


 ___________________________________________________________________________
http://www.vikatan.com/news/coverstory/85513-education-should-be-without-torture.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

‘எங்கே என் மருதா நதி!’ - தேடும் கவிஞர் சக்திஜோதி- விகடன். காம் இல் .. 

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!

என் வீட்டின் பின்னால்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது மருதாநதி.
ஆனால் பால்யத்தில் நான் உணர்ந்திருந்த மருதாநதியல்ல இப்போது  பார்க்கிற இந்த நதி.  மலையடிவார கிராமத்திற்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய ஊர் அய்யம்பாளையம். இந்த கிராமத்தின் பெரும்பகுதி நீராதாரத்தை நிறைவு செய்வதாக இன்றைக்கும் இந்த நதி அமைந்துள்ளது.

மூன்றுபக்க மலையிலிருந்து கிளைத்துப் பெருகி இணைகிற மருதாநதி, சட்டென பெருகியிருக்கும் முக்கூடல் சந்திப்பில் சின்னஞ்சிறியதாக ஒரு அணைக்கட்டு. அங்கிருந்து தெற்கிலும் வடக்கிலும் கிளைபிரிகிற இரண்டு பெரிய வாய்க்கால்களோடு மையத்தில் அகன்று பாய்கிற மருதா என்னுடைய பால்யகால சினேகிதி.

பள்ளிப்பிராயத்தில் தோழியரோடு ஆற்றிலாடியதன் ஈரம் இன்றுவரை உலரவேயில்லை. ஆனால் மருதா தன்னுடைய ஆழ, அகலங்களை இழந்து, நீர்மை குறைந்தவளாக ஆகியிருக்கிறாள். என்றபோதிலும் எப்பொழுது விடுமுறை வருமென்று காத்திருந்து மருதாவைச் சந்தித்த நாட்களின் காதல் இன்னமும் குறையவேயில்லை.

மலைகள் சூழ இயற்கையான படித்துறை அமைந்த ஒருபக்கக் ஆற்றங்கரையில்,  மண்ணால் அமைத்த வெள்ளாவியில் உடைகள் வேகின்ற வாசனை அந்தப் பகுதி முழுக்கப் பரவியிருக்க துவைத்து உலர்த்திய உடைகளின் வண்ணங்கள் அக்கரையில் விரவியிருக்கும். விவசாயக்குடிகளின் நிலமாக மட்டுமேயிருப்பதால் மறுகரையில் மாலையில் மஞ்சள் வெயிலில் மாடுகளைக் குளிப்பாட்டும் காட்சி ஒளிர்ந்திருக்கும். குளிப்பதற்கென தனிப்பகுதி ஒன்றுமில்லை. ஆனால் தென்னந்தோப்புகளை ஊடுருவி பாய்கிற மருதாவில் ஆழம் குறைவாகவும் நீர்ச்சுழல் அற்ற பகுதிகளையும் அடையாளம் கண்டு அங்கங்கே நீராடித் திளைப்பவர்களை எப்போதும் பார்க்க முடியும்.

வெள்ளிமீன்களென துள்ளியபடி எதிரோடி தெறிக்கும் அயிரையை வலைவீசிப்  பிடிக்கிற தொழில்முறையாளர்களை வேடிக்கை பார்ப்பது கோடை விடுமுறையின் பொழுதுபோக்கு. என் பங்குக்கு அக்காவோடு சேர்ந்து ஓடும்நதியில் தாவணி விரித்துப் பிடித்த மீன்களை வீட்டிற்கு கொண்டு வருவேன். ஆற்றிலிருந்து அள்ளிவந்த நீரை கண்ணாடி குப்பியில் ஊற்றி பிடித்துவந்த மீன்களை வளர்க்க முற்பட்டு, அவை ஒவ்வொன்றாய் செத்துப்போன கணங்களில் துயரத்தோடு அடக்கம் செய்த சிறுபிள்ளை கணங்கள் மறக்க இயலாதவை.

முதன்முதலாக பயத்தோடு மருதாவை நான் நினைவு கொண்ட சம்பவம் அதன்பின் ஒருபோதும் நிகழவேயில்லை. நான் சிறுமியாக இருந்த ஒரு மழைகாலத்தில் காட்டாறெனப் பெருகிய மருதாவைக் கடக்கமுற்பட்ட  என்னுடையத் தெருவைச் சேர்ந்த முருகேஸ்வரி என்கிற பெண்ணை அது  தன்னோடு இழுத்துச் சென்றது. அப்போது கைக்குழந்தைகளாக இருந்த அவருடைய இரண்டு மகள்களும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவர்களாகி இதே தெருவில் வசிக்கிறார்கள். என் பார்வையில் அவர்கள் தென்படும் பொழுதெல்லாம் அடித்துப்புரண்டோடிய மருதாவைக் கண்டு நான் பயந்த தினத்தை நினைவூட்டி விடுகிறார்கள். அந்த மழைநாளில் பக்கத்து ஊர் வரையில் முருகேஸ்வரியோடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, கடைசிவரையில் கண்டெடுக்க முடியாமல் போன வேறு இரண்டு பெண்களும் மருதாநதிக்கரையில் ஆவியாக உலாவுகிற கதைகள் இன்றுவரை தொடர்ந்திருக்கிறது. உள்ளூரில் பேய்க்கு பயம், வெளியூரில் நீருக்குப் பயம் என்கிற சொலவடை உண்டு. மிக நீண்ட காலம் மருதாவும், மருதாவில் ஆவியான பெண்களும் இரண்டுவிதமாகவும் பயப்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.

பள்ளிப்பிராயத்தின் ஓய்வுநேரங்களில் உலகவரைபடத்தில் நாடுகளை அடையாளம் காணுவதும், நதிகளை வரைந்து பெயர் குறித்துப்பார்ப்பதும் என்னுடைய பிடித்த விளையாட்டுகளுள் ஒன்றாக இருந்தது. நதிகளை வரைவதற்காகப் பயன்படுத்துகிற நீலவண்ணம் இப்போதுவரை எனக்குப் பிடித்த வண்ணமாகவே இருக்கிறது.

நீலம் என்றவுடன் சிந்துநதியின் கிளை நதியான ஜீலம்/ நீலம் என்கிற நதி நினைவுக்கு வருகிறது, இந்தியாவில் “ஜீலம்” என்றும் பாகிஸ்தான் பகுதியில் “நீலம்” என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்த நதியின் மீது நீர்மின்சாரம் எடுப்பதற்கான “கிருஷ்ணகங்கை” திட்டத்தினை 2007 ஆம் ஆண்டில் இந்தியா தொடங்க, அப்போது சர்வதேச நீதிமன்றத்திடம் பாகிஸ்தான் முறையிட்டுத்  தடுத்துவிட்டது. ஆனால் இந்தியா திட்டமிட்ட 330 மெகாவாட் நீர்மின் திட்டத்தைவிட மூன்று மடங்கு பெரிய நீர்மின்திட்டத்தை அதே நதியில் பாகிஸ்தான் தன்னுடைய எல்லையில் சீனாவின் உதவியுடன் அப்போதே தொடங்கிவிட்டது. 2011 இல் தடை விதிக்கப்பட்ட திட்டத்தை மீண்டும்  2013 சில நிபந்தனைகளோடு இந்தியா செயல்படுத்தியது. அந்த நிபந்தனைகள் என்னவென்றால், நதிநீரை வேறு எதற்கும் இந்தியா செலவு செய்யாமல் அதனுடைய நீரோட்டத்தைத் திருப்பி, மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பதுதான் அது. இந்த நிலத்தில் உற்பத்தியாகும் நதிநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ, அந்த அணைக்கட்டில் வண்டல் எடுக்கவோ இந்தியாவுக்கு அனுமதியில்லை.

ஆசிய கண்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கிடையே பாய்கிற  நதிகளுக்காக நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் எதுவும் வேறுநாடுகளில் முறைப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்தியா மட்டும் பாகிஸ்தானுடனும் வங்காளத்துடனும் நதிநீர் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. 1960 இல் நதிநீரை விட்டுகொடுத்து பாகிஸ்தானுடன்  இணக்கம் வைத்துகொள்ள நினைத்த  இந்தியாவோடு எப்பொழுதுமே அந்த நாடு நட்புக் கொள்ளவேயில்லை. போதாக்குறைக்கு செய்துகொண்ட சர்வதேச நதிநீர் ஒப்பந்தத்தின் விளைவாக ஆயக்கட்டு நாடுகளுக்கான நீர்வரத்தைக் குறைக்காமல் அனுப்பவேண்டும் என்பது இந்தியாவுக்கு மட்டுமேயான நிபந்தனையாக ஆகியிருக்கிறது. இவ்விதமாக நதிநீர் பகிர்மானத்தில் அயல்நாடுகள் தொடங்கி, உள்நாட்டிலும் மாநிலங்களுக்கிடையேயும் தீரவே தீராத போராட்டம்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நீர்மின்சாரம் எடுப்பதற்கான அணைக்கட்டு அமைத்தல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் சார்ந்த சூழலில் வளர்ந்தவள் நான். அணையினைக்  கட்டுவதற்காகக் குவிக்கப்பட்டிருக்கும் மணலில் கைகள் எட்டும் தூரம்வரையில் சுரங்கம் அமைப்பதும், சிறிய அளவிலான அணைக்கட்டுகளை அந்த மணல்மேட்டில் கட்டிப்பார்ப்பதும் என்னுடைய பால்யகால விளையாட்டு. தேனி மாவட்டத்தின் சுருளியாறு நீர்மின்திட்டப் பணிகளிலும், கோவை மாவட்டத்தின் காடம்பாறை நீர்மின்திட்டப் பணிகளிலும் அப்பா ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து என்னுடைய வளரிளம் பருவத்தின் நீர்மையை அந்த நீர்த்தேக்கங்களிலிருந்தே அடைந்தேன். அப்பாவை நேசிக்கும் பெண்பிள்ளைகளுக்கு அப்பாவின் தொழிலும் அது சார்ந்த சூழலும் மிகப்பிடித்ததாக இருக்கும். அதனாலேயே எந்த நீர்மின்சாரத் திட்டத்தின் செயல்பாடுகளின் மீதும், அணைக்கட்டுகளின் மீதும் இயல்பான கவனமும் நதிகளின் மீதான பிடிப்பும் எனக்கேற்பட்டது.

தண்ணீர் பஞ்சம் என்கிற சொல்லை கேட்டு வளராத என்னை
கே.பாலச்சந்தரின் “தண்ணீர் தண்ணீர்” என்கிற திரைப்படத்திற்கு அப்பாதான் அழைத்துச்சென்றார். தண்ணீரும் மழையுமற்ற நிலங்கள் இருப்பதை என்னுடைய பதின்ம வயதில் அந்தத் திரைப்படத்தில்தான் முதன்முதலாக அறிந்து கொள்ள நேர்ந்தது. அப்படியான என்னுடைய வாழ்சூழலில் தண்ணீரைப் பற்றியும், நதிநீர் இணைப்புப்பற்றியும் அப்பாவும் அவரது நண்பர்களும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன். அப்போது அவர்கள் பேசிய “மழையற்று வறண்ட நிலங்கள் ஒருபக்கமும் பயன்படுத்த இயலாமல் கடலில் கலக்கும் வெள்ளமும்” இன்றுவரையில் அப்படியேயிருக்கிறது.

இயற்கையாக அமைந்த குளங்கள், கண்மாய் போன்றவைகளை கோடையில் தூர்வாரி மழைக்காலத்திற்கு தயார் செய்வதும், தேவைக்குத் தக்க குளங்கள் வெட்டி பராமரிப்பதும் காலங்காலமாக நம்மிடமிருந்த ஒரு பழக்கம்.
“காடு கொன்று நாடாக்கி
குளந்தொட்டு வளம்பெருக்கிஎன பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. தமிழர்களிடம் இருந்த இந்தப் பழக்கம் பீகார் பழங்குடியினரிடமும் இருந்ததாக டி.டி. கோசாம்பி குறிப்பிடுகிறார். இந்த நிலத்தின் ஆதிக்குடிகள் தண்ணீரின் தேவையை நன்குணர்ந்தவர்களாகவும், பருவங்களைக் கணித்து அதற்கேற்ப செயல்படுகிறவர்களாகவும் இருந்தார்கள்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை புலவர் குடப்புலவியனார் எழுதிய புறநானூறு(18) பாடலொன்று ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம் ஆண்டுகள் வாழ  வாழ்த்துகிறது. அவ்விதம் ஒரு மன்னன் வாழச்செய்யவேண்டியதாக அந்தப்பாடல் குறிப்பிடுவது என்னவென்றால்,
“நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே!” என மன்னனின் புகழ் நிலைத்திருக்கவும் ,”நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“ என நீரும் உணவும் உடலுக்கு மிக அவசியம் என்பதால்
“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைதிசினோரே!” என மக்கள் பசியின்றி வாழ நிலமும் நீரும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதாகவும் நீர்வளம் காக்க நினைப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் புண்ணியம் தரும் செயல் என்கிறது இந்தப்பாடல்.   

ஆதிகாலம் தொட்டு இன்றுவரையில் நீருக்கான தேடலும் அதனைப் பாதுகாக்கும் தேவையும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. தண்ணீரைத் தேடிச் சேகரிப்பதிலேயே தன்னுடைய வாழ்நாளை கழித்துவிடுகிற பெண்கள் காலங்காலமாக வாழ்ந்து மறைகிறார்கள். விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரச் சிக்கலை மையமாக வைத்து கதைகள் எழுதியவர் எழுத்தாளர்  கந்தர்வன். அவரது “தண்ணீர்” என்கிற சிறு கதையில் மழை பொய்த்துப்போய், பசுமை அற்றுப்போன ஒரு கிராமத்தின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வதற்காக அந்தக்கிராமத்துப் பெண்கள் படுகிற துயரினைச் சொல்லியிருப்பார். பக்கத்து கிராமத்திற்கு வெகுதொலைவு நடந்து சென்று தண்ணீர்பிடித்துத் திரும்பும் பெண்கள், பாசஞ்சர் இரயிலில் எப்பொழுதும் தண்ணீர் வருமென்பதை அறிந்துகொண்ட நாட்களுக்குப் பிறகு காலிக்குடங்களோடு ஓடிச்சென்று அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தண்ணீர் பிடித்து வருகின்றனர். அப்படியொரு பழக்கத்திற்கு ஆட்பட்ட பெண்களில் இந்திரா என்கிற பெண் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் பொழுது இரயில் புறப்பட்டுவிடுமே என்கிற பதற்றத்தில் கைகளில் ரத்தம்வருமளவுக்கு அந்தக் குழாயை அழுத்திப்பிடிக்க முயலுகிறார். நிரம்பாத குடத்திற்காக வருத்தப்பட்டபடி  கிளம்பிவிட்ட ரயிலிலிருந்து குதிக்க முற்பட, வடக்கத்திப் பெண் ஒருவர் தடுத்துக் காப்பாற்றுகிறார். ரயிலோடு போய்விட்ட பெண்ணுக்காக வருந்தி அழுது, இராமநாதபுரம் வரைத் தேடிச் சென்று உறவினர்கள் திரும்ப, அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கி, தண்ணீரோடு தண்டவாளம் வழியே நடந்து வீடுதிரும்புகிறாள் இந்திரா. “குடத்துத் தண்ணீரைச் சுமந்துகொண்டா அவ்வளவு தொலைவிலிருந்து நடந்து வந்தாய்” எனக் கேட்கும் தகப்பனுக்கு, “நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது?” என்று மட்டும் சொல்வாள். ஒருவீட்டின் அனைத்து உறுப்பினருக்கும் தேவையான தண்ணீர் தேவையை அந்த வீட்டின் பெண்தான் பூர்த்தி செய்கிறவளாக இருக்கிறாள்.

அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலின் மலையாள ஆக்கதித்தினை வாசித்த மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா தன்னுடைய பேட்டி ஒன்றில், “இந்த நாவல் வாசிப்புக்கு முன்புவரை மலையாள ஆக்கங்களோடு ஒப்பீட்டளவில் தமிழ்ப் படைப்புலகம் பின்தங்கியிருப்பதாக உணர்ந்ததாகவும், வாசிப்புக்குப்பின்பே தமிழ் ஆக்கங்களின் செட்டான தன்மையினால் கவரப்பட்டு தமிழிலக்கியம் நோக்கி நகர்ந்ததாகவும்” கூறுகிறார். தண்ணீருக்காக குடத்தைத் தூக்கிக்கொண்டு ஊர் பெயர் தெரியாத பெண்கள் அலைவதை திருமபத் திரும்பப் பார்த்ததன் விளைவாக இந்தக் கதையை எழுதியதாக அசோகமித்திரன் சொல்கிறார்.

வறண்ட நிலத்தின் தண்ணீர் தேவைக்காக உடல், பொருள், ஆவி இழந்தவர்களின் கதைகளினால் இந்த நிலம் உருவாகியுள்ளது. “இரண்டு சொட்டு தண்ணீர்” என்கிற பொருளில் K.A. Abbas  இயக்கத்தில்
1971 இல் “Do Boond Pani” என்கிற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. குடிதண்ணீருக்காக மைல்கணக்கில் நடந்து செல்கிற நிலையிருக்கும் ஒரு நிலத்தின் வளமைக்காக  உருவாக்கப்படுகிற  அணைக்கட்டுகளுக்காக உயிரை இழந்தவர்களும், வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களும் தவறாமல் இருந்துவிடுகிறார்கள் என்பதன் மிகச்சிறியபகுதியை  இந்தத் திரைப்படம் அடையாளம் காட்டுகிறது. அணைக்கட்டுகளில் உயிரிழந்த பலருடைய கதைகளை கேட்டு நானும் வளர்ந்திருக்கிறேன் என்பதால் எந்தவொரு பிரமாண்டமான கட்டிடங்களுக்குள் நுழையும் பொழுதும் அதன் கட்டுமானப்பணிகளின் பொழுது மரித்தவர்களின் ஆன்மாவை ஒருகணம் நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

தண்ணீர் என்பது உயிரின வாழ்வின் ஆதாரமாக இருக்க சுற்றுச்சூழல் மாசுபடுத்துவது என்பதும் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. பருவமழை பொய்த்துப் போவது, நீராதாரம் பாதிக்கப்படுவது, குடிநீருக்கான தேடல், விவசாயம் நலிவடைவது என்பது சமகாலத்தின் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பெருமளவில் நகரமயமாதலும், விவசாயநிலம் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதும், மீதமிருக்கும் விவசாயமும் விவசாயிகளின் அடிப்படையான வாழவாதரத்தையே நிரப்ப வழியற்றுப் போய்விட்டதுமான  நிலைக்கு காடுகள் அழிக்கப்படுவதும் சூழல் மாசுபடுவதும்தான் காரணம். எனவே இந்தியாவில் சுற்றுச்சூழல் சிக்கல்களைக் களைவதற்காக 1974 ஆம் ஆண்டில் சட்டம் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகுதான் மிகக்கடுமையாக சுற்றுசூழல் பாதிப்பின் வேகம் அதிகரித்திருக்கிறது. மழைநீர் நிலத்தில் சேகரம் ஆகும்படியான மழைநீர் சேகரிப்புக்குட்டையமைத்தல்,  கிணற்றடிகளில் நீர் உறிஞ்சு குழிகளையும், ஓடைகளை சீரமைப்பதும், குளங்களை தூர் வாருவதும், மழை மரங்களை நட்டுப்பராமரிப்பதுமான பாரம்பரிய செயல்பாடுகளை மீட்டெடுப்பது காலத்தின் அவசியமாகியிருக்கிறது. 

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்படி, இந்தியாவில் 302 ஆறுகள் மாசுபடிந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 275 ஆறுகள் தனது நீண்ட பாதை முழுக்கவே மாசுபடிந்துள்ளது. இந்த ஆறுகளில் உயிர்வேதியல் மற்றும் ஆக்சிஜன் அளவு மிகக்குறைவாகவும் கரிமமாசு அதிகமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 39 இடங்களிலுள்ள 7 ஆறுகள் பெரிதும் மாசுபட்டுக் காணப்படுகின்றன. பவானி,  தாமிரபரணி, காவேரி, பாலாறு, சரபங்கா, திருமணிமுத்தாறு மற்றும் வஷிஸ்டா ஆகிய ஆறுகள் மாசுபட்டுள்ளதாகவும் இந்த ஆறுகளில் உயிர் ரசாயன ஆக்சிஜன் மிகவும் குறைவாக லிட்டருக்கு 30 மில்லிகிராம் அளவில் காணப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கிறது. 

நீர்வியாபாரம் என்பதைப்பற்றி ஒருகாலகட்டத்தில் சொல்லியிருந்தால் நம்பியிருக்கவே மாட்டோம். இன்றைக்கு அதுதான் லாபம் தருகிற தொழிலாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் வற்றவே வற்றாத ஒரேஒரு ஜீவநதி அயல்நாடுகள் முதலீடு செய்திருக்கும் குளிர்பானங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. வற்றுகிற நதி குறித்தும், விற்பனையாகும் நீர்வளம் குறித்தும் கையறுநிலைப் பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறோம்.

இப்பொழுதும் மருதாநதி ஓடிகொண்டிருக்கிறது. இப்பொழுது இது மழைகால மருதா மட்டுமே. சூழலின் மாசு அதன் மீது படியவில்லை எனினும் ஓடிப்பெருக்கெடுக்கும் மருதாவைப் பார்த்து வெகுகாலமாயிற்று. தேங்கிய அணைநீரில் மீன்களை வளர்த்து லாபம் பார்ப்பவர்கள் வரத்தொடங்கிவிட்ட இந்த நாட்களில் அயிரையும் கெளுத்தியும் குறவையும் உழுவையும் என்னவென்றே அறியாத காலமாகிப் போனது. வெள்ளாவி வாசனையும் இல்லை, நாட்டு மாடுகளைக் குளிப்பாட்டும் படித்துறையும் இல்லை. சுழல் அறிந்து நீச்சல் பழக இடம் தேடும் இளையவர்களும் இல்லை.  நீர் சார்ந்த இவ்வகையான மாற்றங்கள் உணவு பண்பாட்டு மாற்றமாகவும் முற்றிலுமாக திரிபடைந்துவிட்டது.  திண்ணையற்ற வீடுகள் போல தண்ணீர் சார்ந்தும் வாழ்வியல் முறை மாறிவிட்டது. இன்றைக்கு யார் ஒருவர் வீட்டு வாசலிலும் “ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கக் கொடுங்க” என்று கேட்டு யாரும் நிற்பதில்லை.

என்னைப் போல பலருக்கும் சிநேகிதியாக அந்தந்த ஊர்களில் இருந்த பல நதிகள் இன்றைக்கு சாயப்பட்டறைக்கும், தொழிற்சாலைக் கழிவுகளுக்கும், மருத்துவமனையின் கழிவுகளுக்கும் அயல்நாட்டு குளிர்பானங்களுக்கும் காவு போய்விட்டன. மீன்களற்றுப்போன நதிகளாகி, மணல் அள்ளும் நதிகளாகி,  நதியே அற்று, பெயராகி போன நதிகளுக்காக மணல் இல்லாத ஆறு என்கிற என்னுடைய கவிதை,

“ஆற்றங்கரையில்
நாங்கள்  நட்டுவைத்த
செடிகளை
யாரோ  பிடுங்கி  எறிந்துவிட்டனர்

தட்டாங்கல்லுக்கு  பொறுக்கி   வைத்திருந்த
௬ழாங்கல்லைக்  காணவில்லை

சிறு மீன்களுக்குப்  பொரியிடும் வயோதிகர்கள்
இன்று  வரவில்லை

ஊத்துத்  தோண்டி விளையாடும்  சிறுமிகள்
மிரண்டு  ஓடுகின்றனர்

ராட்சஷ  ஓநாய்களைப்  போல
ஓலமிட்டு   வருகிறது  மஞ்சள் நிற லாரிகள்

ஈரம் உலர்த்துவதற்கென
நின்றிருந்த  வேம்புகள்
இன்னும்  சிறிது  நேரத்தில்  விழப்போகின்றன

லாரிகள்  சுமந்துபோகும் நதி மணலில்
ஈரம் வற்றிட சுருண்டு மடிகின்றன சிறு  நத்தைகள்.

ஒரு நிலத்தில் நதி வற்றிபோனால், அந்த நிலத்தில் ஏரிகளும், குளங்களும், கம்மாய்களும் வற்றிப்போகும். ஒரு நிலத்தில் நீர் ஆதாரம் வற்றிபோவது என்பது அந்த நிலத்தில் வாழுகிற மனிதர்களின் மனங்களையும் வற்றச்செய்துவிடும்.


***************************************************************************************************************
http://www.vikatan.com/news/vikatan-specials/84294-story-about-poet-sakthijothis-marutha-river.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2